Sunday, October 11, 2015

சிந்தனை செய் மனிதா !!

சிந்தனை செய் மனிதா !!




சிந்தனை செய் மனிதா 
பகுத்தறிவு கொண்டே
சிந்தனை செய் மனிதா !!

உணவளிப்பவன் கடவுள் எனின்
சோமாலியா நாட்டின் எல்லையில்
தூங்கி விட்டானா அவன் ?
என்றே சிந்தனை செய் மனிதா !!

ஏவுகணை விடும் நாளில்
ராவு காலம் என்பது உண்டா
என்றே சிந்தனை செய் மனிதா!!

வான்  கடவுளின் வீடு எனின்
ஓசோனில் ஓட்டை விழும் வரை
வேடிக்கை பார்த்தானா கடவுள்
என்றே சிந்தனை செய்
மனிதா !!

ஈழத்தில் பாலஸ்தீனத்தில்
ஈரானில் ஆப்கானிஸ்தானில்
ஈவு இரக்கமின்றி கொத்துக்கொத்தாய்
மனித உயிர்கள் கொல்லப்படுகையில்
கதைத்துக்  கொண்டிருந்தானா
கடவுள் என்றே சிந்தனை செய் மனிதா !!

பாலியல் வன்கொடுமை நடந்திடும்
நேரம் அங்கிங் கெனாதபடி
எங்கும் நிறைந்தவன்
பிடில் வாசித்துக் கொண்டிருந்தானா
என்றே சிந்தனை செய் மனிதா!!

தான்தோன்றிக் கடவுள்
தண்டவாளத்தில் இளவரசனும் - கோகுல்ராசும்
தலைக் கொய்து
கிடந்த போது தண்டச்சோறு
தின்றுக் கொண்டிருந்தானா
என்றே சிந்தனை செய் மனிதா !!

பரிணாமக் கொள்கை புரிந்து விடும்
மூளையின் மடிப்புகளில் படிந்திருக்கும்
மூடத்தனத்தை அகற்றினால்;
எனவே சிந்தனை செய் மனிதா !!

தூணிலும் துரும்பிலும் கடவுள் இல்லை
எங்கெங்கும் கரப்பான் தான் உண்டு
எனவே சிந்தனை செய் மனிதா !!

பகுத்தறிவு கொண்டே சிந்தனை செய்தால்
கடவுள் எனும் பொய்க் கற்பிதம்
வஞ்சகரின் சூழ்ச்சியால் வந்ததே
என்ற ஈரோட்டுத்  தந்தையின்
தத்துவம்  புரிந்திடுமே !!
மூடத்தனத்தின் தீச்செயல்
யாவும் நீங்கிடுமே !!

- வழக்கறிஞர்  ம .வீ . கனிமொழி

No comments: